திருவள்ளூர்: விவாகரத்து கேட்டதில் தகராறு..மனைவி குத்திக்கொலை
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அய்யநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களா. வயது 40. இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தமிழ்மணி என்பவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அய்யநேரி கிராமத்திற்கு சென்ற கணவன் தமிழ்மணி, வீட்டில் இருந்த மனைவி மங்களாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துபோடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மனைவி மங்களா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கணவன் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கு சென்ற கணவன் தமிழ்மணி அருகில் இருந்த கத்தியால் மங்களாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மங்களாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான கட்டத்தை அவர் எட்டயிருந்ததால் அங்கிருந்து வாலாஜா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மங்களா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆர்.கே பேட்டை காவல்துறையினர், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கணவன் தமிழ்மணியை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக