தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? - அமைச்சர் திடீர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை
அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு
மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் கொரோனா
தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்,
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி
கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா
தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பொதுத் தேர்வு
எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு
உள்ளது. தற்போது மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டு
உள்ளது. ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
என்றும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் தினசரி நேரடி
வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே கொரோனா தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் தொற்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் புதிய தலைவலியை ஏற்படுத்தி
உள்ளது. இந்தியாவில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான்
பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், 45
பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்
மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில்,
சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், தமிழ்நாடு
பொது நூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூற்பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த நூற்பட்டியலை வெளியிட்டார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ஒமைக்ரான்
வைரஸ் பாதிப்பு தொடர்பாக பள்ளிகள் மூடப்படுவது குறித்து முதலமைச்சர்
ஆலோசித்து முடிவு எடுப்பார் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக